கவிதைப்பேழை: தமிழோவியம்

 

கவிதைப்பேழை: தமிழோவியம்

மொழி   

கவிதைப் பேழை 

தமிழோவியம்

- ஈரோடு தமிழன்பன்



நுழையும்முன்

என்றென்றும் நிலைபெற்ற தமிழே! தோற்றத்தில் தொன்மையும் நீதான்! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான்! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான்! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான்! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய்! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம்!


காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் 

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!


அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை 

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் 

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் - உன் 

நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

காலம் பிறக்கும் முன்.... 


ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி 

ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும் 

மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள் 

மட்டுமே போதுமே ஓதி, நட...

காலம் பிறக்கும் முன்.... 


எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ் 

ஏந்தி வளர்த்தது தாயெனவே 

சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச் 

சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே...

காலம் பிறக்கும் முன்... 


விரலை மடக்கியவன் இசையில்லை - எழில் 

வீணையில் என்று சொல்வதுபோல் 

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் 

கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!


இலக்கணக்குறிப்பு

எத்தனை எத்தனை, விட்டு விட்டு  - அடுக்குத் தொடர்கள்

ஏந்தி - வினையெச்சம்

காலமும் - முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்

வளர் - பகுதி 

ப் - சந்தி, 

ப் - எதிர்கால இடைநிலை 

ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி 

ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒருகுழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்

- பிங்கல நிகண்டு 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 

இனிதாவது எங்கும் காணோம்

- பாரதியார்


தெரியுமா?

உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21

தமிழை ஆட்சி மொழியாகக்

கொண்ட நாடுகள்

இலங்கை , சிங்கப்பூர்